250 கிலோ கஞ்சா காரைநகர் பகுதியில் கடற்படையால் மீட்பு

இந்தியாவிலிருந்து படகில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா, காரைநகர் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான படகை கடற்படையினர் வழிமறித்து சோதனை செய்தபோதே கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.