பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

தமிழோசை ஆனந்தி என தமிழ் உலகம் அறிந்த பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் (P. Ananthi Suryaprakasham) கடந்த வெள்ளிக்கிழமை (21) லண்டனில் காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம், தனது ஆரம்ப காலங்களில் இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அதேசமயம், அறிவிப்பாளராகவும் செயற்பட்டார்.

1970-களில் இங்கிலாந்தை சென்றடைந்த அவர், பி.பி.சி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் நிரந்தர அறிவிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் சேவையாற்றி ஓய்வு பெற்றார்.
அத்துடன், 2006 ஆம் ஆண்டில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஊடகத் துறையில் முக்கியப் பங்கை வகித்தார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.