அம்பாறை சேனாநாயக்க நீர்த்தேக்க வான்கதவு திறப்பு

அம்பாறை டி. எஸ். சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்ததன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (14) மாலை 5 மணிக்கு ஒரு வான்கதவை திறந்து சிலளவு நீரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சகோ. எம்.சி.எம். ரியாஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நீரோடும் பகுதிகளில் நீர் நிரம்பி வழிவதால், பெரிய அளவில் நீரை வெளியேற்றினால் வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால், நீர் மின் உற்பத்தி நிலையத்தை நோக்கி (வெளிப்பாய்ச்சல் அளவு – 800 கியு செக்கன்) மட்டுமே நீரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்த நீர் கல்லோயா ஆற்றில் கலந்து கடலுக்கு செல்லும் என்றும், மழை தொடர்ந்து பெய்துவருவதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டீ. எஸ். சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் 110 அடியாக உள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அம்பாறை மாவட்ட அரச அதிபர், நீர்ப்பாசன திணைக்களம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.