அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு கேட்கும் தனியார் நிறுவனங்கள்

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, அரச நிறுவனங்களும், நீதிபதிகளும் கூட இந்த வீடுகளை பெறவென கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தற்போது அவற்றை மதிப்பீடு செய்து வருவதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டின் பின்னர், இந்த இல்லங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதேசமயம், இவ்வீடுகளை வாடகைக்கு பெற வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கைகளை வைத்துள்ளன. ஆனால் இக்கோரிக்கைகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.
நாட்டின் மொத்தம் 9 இடங்களில் ஜனாதிபதிக்கென தனித்துவமான இல்லங்கள் உள்ளன. அவை கொழும்பு, கண்டி, நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டி, பெந்தொட்டை மற்றும் மஹியங்கனை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இதுவேளை, சில அமைச்சர் இல்லங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. நிதி பற்றாக்குறையால் இவ்வீடுகளை பழுது பார்த்து மெருகூட்ட முடியாத சூழல் நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.