வடக்கு – கிழக்கில் உள்ள பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமிக்க தீர்மானம்
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழ் பொலிஸாரை நியமிப்பதற்கான விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
“நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வடக்கில் எந்தவொரு அரசியல் தலையீடுமின்றி பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போலல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்பட பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தினை பேணி செயற்படும் பொலிஸாருக்கு அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது குறித்து எனக்கு தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன்.”
மேலும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக வடக்கு – கிழக்கிலிருந்து அதிகளவான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.